ரகசியங்களை வெளியிட மறுத்த என் மீது கஞ்சா வழக்கு போட்டு சிக்க வைக்க சதி நடக்கிறது ….. பிரதமருக்கு இஸ்ரோ விஞ்ஞானி எழுதிய கடிதத்தால் பரபரப்பு.

ரகசியங்களை வெளியிட மறுத்த என் மீது கஞ்சா வழக்கு போட்டு  சிக்க வைக்க சதி நடக்கிறது ….. பிரதமருக்கு  இஸ்ரோ விஞ்ஞானி எழுதிய கடிதத்தால் பரபரப்பு.

திருவனந்தபுரம்;

மனிதனை விண்ணிற்கு அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டம் கங்கன்யான். இந்த திட்டத்தின் வெற்றிக்கான பணிகளில் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் ராக்கெட் விஞ்ஞானியாக பணியாற்றி வருபவர் பிரவின் மவுரியா.

இவர் சமீபத்தில் தனது டுவிட்டர் பதிவில் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அதில், கங்கன்யான் திட்டம் குறித்தான ரகசிய தகவல்களை கேட்டு துபாய் நாட்டை சேர்ந்த சிலர் என்னை தொடர்பு கொண்டனர். இதற்கு கோடிக்கணக்கில் பணம் தருவதாகவும் கூறினார்கள்.

இதுதொடர்பாக இஸ்ரோ தலைவருக்கு நவம்பர் 5-ந் தேதி தகவல் தெரிவித்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்தநிலையில் கேரள போலீசார் என்னை கஞ்சா கடத்தியதாக கூறி தொந்தரவு செய்கிறார்கள். ரகசியங்களை வெளியிட மறுத்ததால் என்னை கஞ்சா வழக்கில் சிக்க வைக்க சதி நடக்கிறது.

எனவே, துபாய் உளவாளிகளுக்கும், கேரள போலீசாருக்கும் தொடர்பு இருப்பதாக கருதுகிறேன். இந்த விவகாரத்தில் கேரள காவல் துறையின் உயர் அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்டு உள்ளார். அதேபோல் முன்னாள் இஸ்ரோ தலைவரின் உறவினர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கிறது.

எனவே, இதுதொடர்பாக உளவுத்துறை விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதியுள்ளதாக பிரவின் மவுரியா தெரிவித்துள்ளார்.

Leave a Reply