முதல்வர் குறித்து அவதூறு பேசியதாக பாஜக வழக்கறிஞரை கைது செய்த போலீஸ்.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…

திருவாரூர்;
முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசிய திருவாரூர் மாவட்ட பாஜக நிர்வாகி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். இந்நிலையில், முதல்வர் குறித்து அவதூறாக பேசி சமூகவலைதளங்களில் பதிவிடும் நபர்களை அவ்வப்போது போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த பரவாக்கோட்டையில் நேற்று பாஜக சார்பில் பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாஜக திருவாரூர் மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் வழக்கறிஞர் செந்தமிழ்செல்வன் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியுள்ளார்.
இது தொடர்பாக திமுகவினர் பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்த 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செந்தமிழ் செல்வனை கைது செய்தனர். இவரது கைதை கண்டித்து பாஜகவினர் திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி எதிர்ப்பை தெரிவித்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை நீதிபதி ஜாமீனில் விடுவித்தார்.