ஜெயலலிதாவுக்கு மட்டும் வாரிசு இருந்திருந்தால் … நீதிபதி ஆறுமுகசாமி பரபரப்பு பேட்டி…

திருப்பூர்;
திருப்பூர் மாவட்டத்தில் நடந்த தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர்,
“ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் அறிக்கையை பொது இடத்தில் பேசக் கூடாது. இருப்பினும், அவரது மரணம் தொடர்பான அறிக்கையில் தில்லி எம்ய்ஸ் மருத்துவமனையின் அறிக்கையை நிராகரித்துள்ளீர்களே நீங்கள் மருத்துவரா, உங்களால் எவ்வாறு இந்த முடிவுக்கு வர முடிந்தது என்று சிலர் கேட்கின்றனர்.
ஜெயலலிதாவின் இதயம் தொடர்பான பிரச்னைக்கு ஆஞ்சியோவும், அறுவை சிகிச்சையும் ஏன் செய்யவில்லை என்ற கேள்வி எனக்கு முதலில் எழுந்தது. அவருக்கு இதயத்தில் கால்சியம் டெபாசிட்டும், சிறிய துவாரமும் இருந்ததால், அதற்கு அறுவை சிகிச்சை செய்யலாம் என மருத்துவமனையில் அவருடன் இருந்தவர்கள் ஏற்றுக் கொண்ட ஒன்றாகும்.
மூன்று மருத்துவர்கள், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை தேவை இல்லையென்று கூறினார்கள், ஆனால் ஒரு மருத்துவர் அறுவை சிகிச்சை தேவையில்லை என்று கூறியதாக எம்ய்ஸ் மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில், மருத்துவர்கள் செரியன், கிரிநாத் ஆகியோர் ஜெயலலிதாவைப் பார்த்ததற்கான அறிகுறிகள் இல்லை.
மருத்துவர் ஸ்ரீதர் அவ்வாறு நான் சொல்லவில்லை என்று சாட்சியம் சொன்னதன் அடிப்படையிலும், மருத்துவர் மேத்தீவ் சாமுவேல் அறுவை சிகிச்சை வேண்டாம் என சொல்லவில்லை என சாட்சியம் அளித்ததன், அடிப்படையிலேயே எம்ய்ஸ் மருத்துவனையின் அறிக்கையை நிராகரித்தேன்.
இதற்காக எம்ய்ஸ் மருத்துவமனையை நான் குறைகூறவில்லை.
ஒரு பெண்ணானவள் இந்த உலகத்தை விட்டு போவதற்கு முன் ஒரு உயிரை இந்த உலகத்துக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்ற சேக்ஸ்பியரின் பொன்மொழிக்கேற்றார்போல், ஜெயலலிதாவுக்கு வாரிசு இருந்திருந்தால் மருத்துவமனையில் உதவியாக இருந்திருக்கும். மீதியை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்” என்றார்.