குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர்..கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்..

திருச்சி;
திருச்சி மாவட்டம் லால்குடியில் போக்சோ வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் காவல் ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள வாளாடி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் யுவராஜா. இவரது குடும்பத்திற்கும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஜெகதீசன் என்பவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, யுவராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாலதி, கடந்த மாதம் 2ஆம் தேதி ஜெகதீசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வழக்கில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி காவல் ஆய்வாளர் மாலதி, யுவராஜாவிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத யுவராஜா, இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் பணத்தை யுவராஜா இன்று காலை காவல் நிலையம் சென்று ஆய்வாளர் மாலதியிடம் வழங்கினார்.
அப்போது, அங்கு மறைந்திந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார், ஆய்வாளர் மாலதியை கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.