பட்டா மாறுதல் செய்து தர ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் VAO… பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் …

விருதுநகர்;
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த கீழத்திருத்தங்கல் ஊராட்சி பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிருதிவிராஜ். இவர் தனது நிலத்திற்கான கூட்டுப்பட்டாவை பிரித்து, தனிப்பட்டாவாக வழங்கக்கோரி, செங்கமலப்பட்டியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அப்போது, கிராம நிர்வாக அதிகாரியாக உள்ள உமாவதி(45) மற்றும் கிராம உதவியாளர் பொன்ராஜ் ஆகியோர் பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பிரிதிவிராஜ் கேட்டுக்கொண்டதின் பேரில் இறுதியாக ரூ.5 ஆயிரம் வாங்கிக்கொள்ள சம்மதித்து உள்ளனர்.
லஞ்சம் தர விரும்பாத பிருதிவிராஜ், இது குறித்து விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். தொடர்ந்து, அவர்களது ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் பணத்தை பிருதிவிராஜ், நேற்று கிராம நிர்வாக அலுவலர் உமாவதியிடம் கொடுத்தார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார், உமாவதி, அவரது உதவியாளர் பொன்ராஜ் ஆகியோரை கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து, இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.