சுங்ககட்டணம் கேட்டதற்காக டோல்கேட் ஊழியர்களை ஓட ஓட அடித்து உதைத்த ரௌடி கும்பல் … அதிர்ச்சி சம்பவம் …

திருவண்ணாமலை;
திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் புதியதாக ஒரு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் ஒரு சுங்கச்சாவடி ஆகிய என இரண்டு சுங்கச்சாவடிகள் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் சொகுசு காரில் சுமார் 15-க்கும் மேற்பட்ட ரவுடிகள் வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்துள்ளனர். அப்போது சுங்கச்சாவடியில் சொகுசு காருக்கு சுங்ககட்டணம் கேட்டுள்ளார் சுங்கச்சாவடி ஊழியர். இதற்கு காரில் வந்த ரவுடி கும்பல் திடீரென கீழே இறங்கி வந்து சுங்கச்சாவடி ஊழியரிடம், ‘எங்களிடமே பணம் கேட்கிறாயா’ என்று கூறி சுங்கச்சாவடி ஊழியரை வெளியே இழுத்து போட்டு உதைத்து கொலை வெறி தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் நிலைகுலைந்த அவர் அலறியடித்து ஓட்டம்பிடித்தார். பின்னர் சாவகாசமாக ரவுடி கும்பல் சுங்கச்சாவடியில் இருந்து கிளம்பியுள்ளனர்.மேலும் இச்சம்பவத்தில் அடிப்பட்ட ஊழியர்கள் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து கணியம்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய ரவுடி கும்பலை ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கிய ரவுடி கும்பல் பள்ளிபட்டு பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் இந்த சுங்கச்சாவடியில் காரில் சென்று வரும் போது எல்லாம் சுங்ககட்டணம் வசூலிக்க கூடாது என்றும் கூறி இதுவரையில் மூன்று முறை சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.