போன மாதம் பால், நேற்று நெய்யை தொடர்ந்து இன்று ஆவின் வெண்ணெய் விலையும் உயர்வு… பொதுமக்கள் கண்டனம் …

சென்னை;
ஆவின் நிறுவனத்தில் பால், தயிர் ,மோர் ,வெண்ணெய், நெய் உள்ளிட்ட பால் உப பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஆவின் நிறுவனத்தின் பிரிமியம் நெய் லிட்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டு ரூபாய் 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியது.
இதன் மூலம் நடப்பாண்டில் மட்டும் ஆவின் நெய் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டது. இது சாமானியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில் ஆவின் நெய் விலை உயர்வை கண்டித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று தங்கள் கண்டனங்களை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிலையில் நெய்யைத் தொடர்ந்து வெண்ணெய் விலையையும் ஆவின் நிர்வாகம் அதிகரித்து உள்ளது. உப்பு கலக்காத அரை கிலோ வெண்ணையின் விலை ரூபாய் 250 இல் இருந்து 260 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் 100 கிராம் வெண்ணையின் விலை 52 ரூபாயிலிருந்து 55 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. உப்பு கலந்த வெண்ணெய் 100 கிராம் 52 ரூபாயிலிருந்து 55 ரூபாயாகவும், 500 கிராம் 255 ரூபாயிலிருந்து 265 ரூபாயாகவும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆவின் நெய் நேற்று விலை உயர்ந்த நிலையில் இன்று வெண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பால், நெய்யை தொடர்ந்து வெண்ணெய் விலையும் உயர்ந்து காணப்படுகிறது.