அவன்தான் அப்படி என்றால் அவனோடு பயணம் செய்பவர்கள் எல்லாம் பைத்தியக்காரர்கள்தான் போல.. எடப்பாடியை ஒருமையில் விளாசிய பண்ருட்டி ராமசந்திரன்…

சென்னை:
அதிமுக ஓ பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியை பண்ருட்டி ராமசந்திரன் ஒருமையில் பேசி விமர்சனம் செய்தார். அதிமுக ஓ பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள் சார்பில் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. போட்டி பொதுக்குழுவை நடத்துவது தொடர்பாக இன்று மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை செய்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பண்ருட்டி ராமசந்திரன் பேசுகையில், பழனிசாமி அதிமுக என்ற வாகனத்தை எடுத்துக்கொண்டு போய் எங்கேயாவது இடித்துக்கொண்டே இருக்கிறான்.. கட்சியை விபத்தில் சிக்க வைத்துக்கொண்டே இருக்கிறான்.
பழனிசாமி முதலில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை கொண்டு போய் இடித்தான்.. தோற்று போனோம்.. சட்டசபை தேர்தலில் ஆட்சியை இழந்தோம்.. அவன்தான் அப்படி என்றால் அவனோடு பயணம் செய்பவர்கள் எல்லாம் பைத்தியக்காரர்கள்தான் போல.. இப்படி அவனோடு போய்க்கொண்டு இருக்கிறீர்களே.. நீங்கள் என்ன இறுதி ஊர்வலமா போகிறீர்களா? எடப்பாடி வழி நடத்திய அனைத்து தேர்தலிலும் தோல்வி அடைந்து உள்ளனர்.
அவனை நம்பி போகிறவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. நான் எல்லாம் தெரிந்ததால்தான் இந்த பக்கம் இருக்கிறேன். அதிமுகவை காக்க வேண்டியது நம் கடமை. நான் எல்லாம் எம்ஜிஆருடன் இருந்தவன். எம்ஜிஆர் என்னை வளர்த்தார். எனக்குத்தான் இந்த இயக்கம் பற்றி தெரியும். இந்த இயக்கத்தை நாம் காக்க வேண்டும். ஏனென்றால் ஏழைகளுக்கு இருக்கும் ஒரே கட்சி அதிமுகதான்.
மற்றவர்கள் எல்லாம் வேறு வேறு அணியில் இருந்தனர். ஆனால் நான் எல்லாம் எம்ஜிஆர் உடனே இருந்தவன். எளிய மக்கள் எல்லாம் எம்ஜி ஆர் கட்சிதான். அவர்கள் நம் கட்சியில் உறுப்பினர்களாக கூட இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் அதிமுகவை தங்களின் சொந்த கட்சியாக பார்ப்பார்கள்.
இந்த கட்சி இல்லை என்றால் அவர்களுக்குத்தான் கஷ்டம். அன்றாட கூலிகளுக்கான இந்த கட்சியை காக்க வேண்டும். இந்த கட்சியை எடப்பாடி எங்காவது கொண்டு போய் மோதி விடுவார். எம்ஜிஆர் தன்னுடைய அரசியல் வாரிசு என்று மக்களை கூறினார். என்னுடைய அரசியல் வாரிசுகள் தொண்டர்கள்தான் என்று கூறினார்.
அந்த தொண்டர்கள் பார்த்து யார் தேர்வு செய்கிறார்களோ அவர்கள்தான் அதிமுகவின் தலைவன். அவர்தான் ஒருங்கிணைப்பாளர். நீங்கள் எந்த கோர்ட்டுக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். எடப்பாடி யாருக்கு வேண்டுமானாலும் பணம் கொடுக்கட்டும். ஆனால் தொண்டர்கள் பலம் இருப்பவர் மட்டுமே அதிமுகவை கட்டுப்படுத்த முடியும்.
அதிமுகவில் நிறைய மாற்றங்களை செய்ய வேண்டும் அதிமுகவை காக்கும் ஆற்றல், வலிமை கொண்டவர் ஓ பன்னீர்செல்வம். அதிமுகவில் அடுத்து என்ன நிலைமை இருக்கும் என்று தெரியும். அதனால் ஓ பன்னீர்செல்வத்திற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும், என்று பண்ருட்டி ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.