வயிற்று நோய்களை போக்கும் அக்னீஸ்வரர் திருக்கோவில்!!

வயிற்று நோய்களை போக்கும் அக்னீஸ்வரர் திருக்கோவில்!!

தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக காவிரி கரையோர பகுதிகளில் பல்வேறு சிவாலயங்கள் புராதான பெருமையோடு உள்ளன. சிறப்புமிக்க இந்த கோவில்களில் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலும் ஒன்று.

அக்னி பகவானுக்கு யாகங்களால் உண்ட நெய்யால் வந்த வயிற்று நோயும், யாகத்தில் போடப்படும் பொருட்களை சுட்டெரித்த பாவமும் நீங்க வேண்டி திருக்காட்டுப்பள்ளியில் எழுந்தருளி உள்ள இறைவனை வேண்டியுள்ளார்.

இறைவன் கட்டளைப்படி இந்த கோவிலில் உள்ள அக்னி தீர்த்தம் என்ற தீர்த்த குளத்தை ஏற்படுத்தி, அந்த தீர்த்த நீரால் இறைவனை நீராட்டி வழிபட்டு தனது வயிற்று நோயும், பாவங்களும் நீங்க பெற்றுள்ளார்.

மேலும் அக்னி பகவான் இறைவனிடம் இத்திருத்தலத்துக்கு வருகை புரிந்து என்னால் தோற்றுவிக்கப்பட்ட அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டால் அவர்களது பாவங்களையும், வயிற்று நோயையும் போக்கி அவர்களுக்கு சிறந்த வாழ்வை அளிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார். இறைவனும் அக்னி தேவனின் வேண்டுகோளை ஏற்று வேண்டிய வரங்களை அளித்தார்.

அன்று முதல் திருக்காட்டுப்பள்ளி சிவன் கோவில் அக்னீஸ்வரம் என்ற பெயர் பெற்றது. வயிற்று நோய் உள்ளவர்கள் இத்தல இறைவனை முறையாக வணங்கினால் நோயில் இருந்து விடுபடலாம் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

அக்னீஸ்வரர் கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் ரெயிலில் தஞ்சை வந்து அங்கிருந்து தஞ்சை பழைய பஸ் நிலையத்துக்கு சென்று பஸ் மூலம் திருக்காட்டுப்பள்ளிக்கு சென்று பஸ் நிலையம் அருகில் உள்ள அக்னீஸ்வரர் கோவிலை அடையலாம். நெல்லை பகுதிகளில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் தஞ்சையை அடைந்து மேற்கண்ட வழித்தடத்தில் பயணித்து கோவிலை அடையலாம்.

Leave a Reply