ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது சொத்துக்கணக்கை உடனே தாக்கல் செய்ய உத்தரவு… தவறினால் நடவடிக்கை…தலைமைச் செயலாளர் அதிரடி….

சென்னை:
தமிழகத்தில் பணியில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்கள் பெயரிலும், தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் பிற நபர்கள் பெயரிலும் உள்ள தங்களுக்கு சொந்தமான அசையாத சொத்து விவரங்களை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் மத்திய அரசின் உத்தரவின்படி வரும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் சொத்து விவரங்களை ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது பெயர்களிலோ அல்லது தங்களது குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்களிலோ , உறவினர்களின் பெயர்களிலோ சொந்தமாக அசையாத சொத்து குறித்த விவரங்கள் இருக்குமாயின் அவற்றை ஆன்லைன் மூலமாக அறிவிக்கலாம் என்ற முறை கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
கடந்த ஆண்டு இந்த நடைமுறையை அப்போதைய தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த சண்முகம் அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் கடிதம் மூலமாக அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் இந்த ஆண்டு சொத்து விவரங்களை தாக்கல் செய்ய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் இறையன்பு ஆணை பிறப்பித்துள்ளார்.இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் , ஒவ்வொரு ஐஏஎஸ் அதிகாரிகளும் அவர்களின் அசையா சொத்துக்கள் பற்றிய முழு விவரங்களையும் அளிக்கும் படிவத்தில் ஆண்டு வருமானத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவருக்குப் பரம்பரையாகப் பெற்ற அல்லது அவருக்குச் சொந்தமான அல்லது வாங்கிய அல்லது குத்தகைக்கு அல்லது அடமானத்தில் வைத்திருக்கும் சொத்து, அவருடைய சொந்தப் பெயரிலோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலோ அல்லது வேறு எந்த நபரின் பெயரிலோ, 16.02.1960 தேதியிட்ட OM எண்.8/9/60-AIS(III) மற்றும் 04.01.1994 தேதியிட்ட OM எண்.11017/74/93-AIS(III), இந்த விதியின் கீழ் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, ஒவ்வொரு உறுப்பினரும் அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதிக்குள் வருடாந்திர அசையாச் சொத்துக் கணக்கைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய விதிகளின் படி சொத்து மதிப்பினை சமர்ப்பிக்க தவறும் ஐஏஎஸ் அதிகாரிகள் உரிய காரணத்தை கூற வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.