ரூ.10 லட்சம் தராவிட்டால் வீட்டில் ஒருவரை கொல்வோம் ..அதிகாரி வீட்டின்முன் போஸ்டர் ஒட்டி மிரட்டிய மர்ம கும்பல் ..

சமாஸ்திபூர்:
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி, லக்ஷ்மண் பிரசாத். இந்திய வெளியுறவுத் துறையின் லண்டன் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். சமாஸ்திபூரில் உள்ள அவரது வீட்டில் மகள் மற்றும் மருமகன் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் லக்ஷ்மண் பிரசாத்தின் மகள் வசித்து வரும் வீட்டின் முன் 10 லட்ச ரூபாய் பணம் கேட்டு, மர்ம நபர்கள் கொலை மிரட்டல் கடிதத்தை ஒட்டிச்சென்று உள்ளனர்.
பணம் தராவிட்டால் குடும்பத்தில் ஒருவர் கொலை செய்யப்படுவார்கள் என்று கடிதத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்த நிலையில், லக்ஷ்மண் பிரசாத்தின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
ஏற்கெனவே கடந்த நவம்பர் 20ஆம் தேதி வீட்டின் அருகில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியதாக லக்ஷ்மண் பிரசாத்தின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுகுறித்தும் போலீசில் புகார் அளித்த நிலையில், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
அதேநேரம் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், அதிகாரியின் வீட்டிற்கு காவல் போடப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.