கொரானா பயம் காரணமாக 3 ஆண்டுகளாக பூட்டிய வீட்டுக்குள் வாழ்ந்து வந்த அக்கா  தங்கை …… அதிர்ச்சி சம்பவம் ..

கொரானா பயம் காரணமாக 3 ஆண்டுகளாக பூட்டிய வீட்டுக்குள் வாழ்ந்து வந்த அக்கா  தங்கை …… அதிர்ச்சி சம்பவம் ..

ஹைதராபாத்:

ஆந்திரா – காக்கிநாடாவில் கொரோனா பயத்தால் மூன்று ஆண்டுகளாக வெளியே செல்லாமல் வீட்டிற்கு உள்ளே இருந்த அக்கா – தங்கையை போலீசார் மீட்டு உள்ளனர். தனி அறையில் பூட்டிக் கொண்டிருந்த அக்கா – தங்கை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

காக்கிநாடாவில் அந்த அக்கா – தங்கையின் பெற்றோர் தோசை பாயிண்ட் என்ற கடையை நடத்தி வந்துள்ளனர். இந்த கடைக்கு மக்கள் கூட்டமும் அதிக அளவில் வந்துள்ளது. 2016ல் விபத்து ஒன்றில் அந்த அக்கா – தங்கைகளின் தந்தை பலியாகி உள்ளார். இதையடுத்து அவர்களின் தாயார் மட்டும் தனியாக தோசை கடையை நடத்தி வந்துள்ளார்.

ஆனால் அடுத்த வருடமே அவரும் கேன்சர் காரணமாக பலியாகிவிட அக்கா – தங்கை இருவரும் மன ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பெரிதாக வெளியே செல்லாமல் வீட்டிற்கு உள்ளேயே முடங்கி உள்ளனர். இந்த நிலையில்தான் 2020ல் இவர்கள் பகுதியில் கொரோனா காரணமாக பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா காரணமாக பயம் ஏற்பட்ட நிலையில், ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்த இவர்கள் இருவரும் வீட்டிற்கு உள்ளேயே முடங்கி உள்ளனர். அதன்பின் கடந்த 3 வருடங்களாக இவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

அதன்பின் 3 வருடங்களாக வீட்டிற்கு உள்ளேயே சாப்பிடுவது, அங்கேயே தூங்குவது, கழிப்பறை செல்ல மட்டும் நடு இரவில் வெளியே வருவது என்று வாழ்ந்து உள்ளனர். அவர்கள் வீட்டில் இருக்கும் அக்கா – தங்கையின் கடைசி தம்பி மட்டும் உணவு வாங்கவும், தண்ணீர் வாங்கவும் வெளியே சென்று இருக்கிறார். மற்றபடி இந்த பெண்கள் இருவரும் வீட்டுக்கு உள்ளேயே இருந்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் இந்த விஷயம் காக்கிநாடா மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள் இங்கே வந்து விசாரணை செய்தனர். அப்போதுதான் வீட்டிற்கு உள்ளே இவர்கள் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் குவிந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 1 டிராக்டரில் நிரப்பும் அளவிற்கு பொருள்கள் உள்ளே குவிந்து கிடந்து உள்ளன.

இதை எல்லாம் மாவட்ட நிர்வாகம் நீக்கியது. அதோடு வீட்டையும் மாவட்ட நிர்வாகிகள் சுத்தம் செய்தனர். அந்த வீட்டில் அவர்கள் மின்சார பில் கட்டவில்லை என்பதால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு இருந்தது.

செப்டம்பர் மாதம் வீட்டை சுத்தம் செய்த பின்பும் கொரோனா அச்சம் காரணமாக இவர்கள் வெளியே வரவில்லை. இந்த நிலையில் தகவல் அறிந்த போலீஸ் அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அவர்களின் வீட்டிற்கு சென்று இரண்டு பேரையும் அப்புறப்படுத்தி உள்ளனர். வெளியே வந்தால் கொரோனா எங்களை பிடித்துக்கொள்ளும் என்று இரண்டு பேருமே போலீசாரிடம் மூக்கை மூடியபடி வாக்குவாதம் செய்துள்ளனர்.

அவர்களை கட்டாயப்படுத்தி போலீசார் வெளியே அழைத்து வந்தனர்.



Leave a Reply