கரும்பு கால் கரும்பு, முந்திரி சின்ன முந்திரி ,வெல்லம் ஒழுகுதுன்னு புகார் சொல்வாங்க , அதனால் தான் … பொங்கல் தொகுப்பு வழங்காததற்கு தமிழக அமைச்சர் விளக்கம்…

மதுரை ;
2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் பொங்கல் தொகுப்பில் கரும்பை அரசு வழங்கவில்லை. பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்கக் கோரி பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களிடம் இருந்து ஏன் தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்யவில்லை என்று அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவா்,
பரிசுத் தொகுப்புகளில் பல்வேறு குறைகளை கண்டுபிடிப்பதால், தற்போது பணமாக கொடுக்கப்பட்டு உள்ளது என்றும் கூறினார். கரும்பை கொடுத்தால் முக்கால் கரும்பு, ஒண்ணே கால் கரும்பு கொடுப்பதாகவும், முந்திரி பருப்பை கொடுத்தால் சிறிய முந்திரியாக இருப்பதாகவும்,வெல்லம் கொடுத்தால் ஒழுகுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
அதை உணர்ந்து தான் முதலமைச்சர் உங்களுக்கு தேவையானதை வாங்கிக்கொள்ள வேண்டும் என்று 1000 ரூபாய் பொங்கலுக்கு அறிவித்துள்ளார். மேலும் கால் கரும்பு, அரை கரும்பு, ஒழுகும் வெல்லம் என பொங்கல் பரிசுத் தொகுப்பில் புகார் எழுந்ததே காரணம் என அமைச்சர் ஏ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.