உதயநிதியை பற்றி சமூக வலைதளத்தில் விமர்சித்த அமமுக நிர்வாகி கைது…

வேதாரண்யம்;
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சமூக வலைதளத்தில் விமர்சித்த வேதாரண்யம் அமமுக நிர்வாகி சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கடிநெல்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் சுற்றுச்சூழல் அணி மாவட்ட நிர்வாகியாக இருந்து வருகிறார்.
மேலும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக அண்மையில் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினை சமூக வலைதளங்களில் விமர்சித்தார்.
இது தொடர்பாக வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த திமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி கோபிகிருஷ்ணன் வேதாரண்யம் காவல் நிலையத்தில் கடந்த 24ம் தேதி புகார் அளித்துள்ளார். வேதாரண்யம் காவல் நிலையத்தில் மக்கள் பிரதிநிதியை சமூக வலைதளத்தில் தவறாக விமர்சித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து உடனடியாக சென்னைக்கு விரைந்த வேதாரண்யம் போலீசார், சென்னை அடுத்த போரூரில் இருந்த அமமுக நிர்வாகி செந்திலை கைது செய்தனர். புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து சமூக வலைதளத்தில் விமர்சித்த அமமுக நிர்வாகி சென்னையில் கைது செய்யப்பட்டார்.
அமமுக நிர்வாகி கைது செய்யப்பட்டு இருப்பதை அறிந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் நாகை மாவட்ட அமமுக செயலாளர் மஞ்சுளா சந்திரமோகன் தலைமையில் வேதாரண்யம் காவல் நிலையம் முன்பு கைது செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.