செருப்பினால் மாலை அணிவித்து கவுரவம் தந்துள்ளீர்கள்…. படத்துக்கு செருப்பு மாலை அணிவித்த காங்கிரஸ் பிரமுகருக்கு வாழ்த்து சொன்ன அண்ணாமலை…

சென்னை;
தனது படத்துக்கு செருப்பு மாலை அணிவித்த காங்கிரஸ் பிரமுகருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த பிரமுகர் நிலவன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து அதனை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதற்கு பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பலறும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தனது படத்துக்கு செருப்பு மாலை அணிவித்த காங்கிரஸ் பிரமுகருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில்,
செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட தனது படத்தை பதிவிட்டு, அண்ணா வணக்கம்! செருப்பினால் மாலை அணிவித்து கவுரவம் தந்துள்ளீர்கள். செருப்பு புற அசுத்தங்களில் இருந்து நம்மை பாதுகாப்பது. நான் தற்போது சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் ஏற்றுள்ளேன். செருப்பு அணிவதில்லை. தாங்களும் தங்கள் அன்பான குடும்பமும் நலமுடன் வாழ சபரிமலை சாஸ்தாவை வேண்டுகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.