மணல் திருட்டிற்காக 7 கி.மீ தூரத்திற்கு பைபாஸ் சாலை அமைப்பதா ? இது கொலைகார செயல்…சீமான் கண்டனம்..

தஞ்சாவூர்:
திருவையாற்றில் ரூ.191 கோடி மதிப்பீட்டில் பைபாஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மானாமதுரை – பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக கண்டியூர், திருவையாறு, பெரும்புலியூர், கல்யாணபுரம் உள்ளிட்ட கிராமங்களின் வழியே சுமார் 7 கி.மீ தூரத்திற்கு பைபாஸ் சாலை அமைக்கப்படுகிறது.
விளைநிலங்களில் பைபாஸ் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டியூரில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பாதிப்புகள் குறித்துக் கேட்டறிந்தார். மேலும் விளைநிலங்களில் போடப்படும் சாலை பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,
“விளை நிலத்தை அழித்து இந்த சாலை போட அவசியம் என்ன, இதற்கு முதன்மை காரணம் காவிரி, கொள்ளிடம், குடமுருட்டி ஆறுகளில் இருந்து மணலை வசதியாகக் கொண்டு செல்வதற்காகத்தான். முதன்மை சாலையில் லாரிகள் மணலை கொண்டு போகும் போது விபத்துக்கள் ஏற்படுகிறது.
அதனால் மக்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்படுகிறது. இந்த பைபாஸ் சாலை மணலை திருடி கொண்டு செல்வதற்காகத்தான், மக்களின் பயன்பாட்டிற்காக இந்த சாலை அமைக்கப்படுகிறதா, இதை தொடங்கி வைத்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கூறட்டும்.
இது கொலைகார செயல், கொடுங்கோல் செயல், பலகோடி உயிர்களைக் கொலை செய்து இருக்கிறார்கள். படுகொலையாளர்கள், ராஜபக்சேவை விட படுகொலையாளர்கள்” எனக் குற்றம் சாட்டினார்.