தமிழக அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலைகளை குப்பை வண்டியில் கொண்டு வந்த ஊழியர்கள்… பொதுமக்கள் கடுப்பு …

சென்னை:
பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.1,000 உடன் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, வேட்டி மற்றும் சேலை ஆகியவை வழங்கப்படவுள்ளது.
இதனை ஒட்டி இலவச வேட்டி, சேலைகள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நியாய விலைக் கடைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைக்கு வட்டாட்சியர் செல்வம் தலைமையில் வேட்டி, சேலைகள் அனுப்பட்டுள்ளது.
இதில் ஒரு சில நியாய விலைக் கடைகளுக்கு மட்டும் குப்பை அள்ளும் டிராக்டர் வண்டியில் வேட்டி, சேலை அனுப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வட்டாட்சியர் கூறுகையில், “வண்டியில் சென்றது பொங்கல் பரிசு கிடையாது. அது வேட்டி, சேலை. ஆனால் அவை அனுப்பப்பட்ட வாகனம் குப்பை வண்டியா என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆகையால் அது குறித்து விசாரிக்கிறேன்” என தெரிவித்தார்.
இலவச வேட்டி, சேலைகளை குப்பை வண்டியில் கொண்டு வந்து இறக்கிய சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.