தகனம் செய்த சூடு ஆறுவதற்குள் கலங்காமல் நாட்டுக்காக கடமையைச் செய்ய வந்த மோடி… இழப்பின் வலியை மறைத்து கடமையாற்றிய பிரதமர் …

அகமதாபாத்,
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் இன்று அதிகாலையில் காலமானார். இதையடுத்து இன்று மேற்கு வங்காளத்தில் மோடி பங்கேற்க இருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி இந்த விழாவில் காணொலி காட்சி மூலம் அவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தனது தாயாரின் இறுதி சடங்குகளை முடித்து கொண்டு இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அவர், மேற்கு வங்காளத்தில் முதல் முறையாக இயக்கப்படும் ஹவுரா-நியூ ஜல்பை குறி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும், ரூ.5,800 கோடி மதிப்பில் நிறைவுற்ற பல்வேறு ரெயில்வே திட்ட பணிகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், மேற்கு வங்காளத்தில் ரூ.7,800 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “மத்திய அரசு இந்திய ரயில்வேயை நவீனமயமாக்க இதுவரை இல்லாத அளவுக்கு முதலீடுகளைச் செய்துவருகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், தேஜாஸ் எக்ஸ்பிரஸ், ஹம்சஃபார் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் அதனால் உருவாகியுள்ளன. ரயில்வே துறை நவீனமயமாக்கத்தில் அடுத்த எட்டு ஆண்டுகள் புதிய பாதையாக இருக்கும்” கூறினார்.
தொடக்க விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், பிரதமர் மோடி தனது தாய் மறைந்த இந்த கடினமான சூழலில் தவறாமல் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.
தகனம் செய்த சூடு ஆறுவதற்குள் கலங்காமல் நாட்டுக்காக கடமையைச் செய்ய வந்த மோடி;
தாயார் இறந்த துக்கம் ஒரு புறம் இருந்தாலும் சோகத்தை மறைத்து திட்டமிட்டபடி அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
நேர்மையாக வாழ வேண்டும் என கடந்த பிறந்தநாளில் தாயார் மோடியிடம் கூறியதாக அவர் நினைவுகூர்ந்துள்ளார். தாய் சொல்லை தட்டாத மகனாக வாழ்ந்து காட்டுகிறார் நமது பிரதமர் .