அரசு கருவூலபணம் 2 கோடியை ஆட்டையை போட்டு தலைமறைவான அரசு அதிகாரி … தேடி வரும் போலீசார்… அதிர்ச்சி சம்பவம் ..

ராமநாதபுரம் ;
முதுகுளத்தூர் சார்நிலை கருவூலத்தில் சமீபத்தில் லட்சக்கணக்கில் மோசடி செய்த கணக்காளர் குறித்து தொடர்ந்து நடத்திய ஆய்வில் ராமநாதபுரம் மாவட்ட கருவூரத்தில் கோடிக்கணக்கில் மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி மகன் முனியசாமி (36). ராமநாதபுரம் மாவட்ட கருவூலத்தில் பணியாற்றி வந்த இவர் பணிமாறுதல் செய்யப்பட்டு கடந்த 4.11.22 அன்று முதுகுளத்தூர் சார்நிலை கருவூலத்தில் கணக்காளராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் மாவட்ட கருவூல அதிகாரி டிசம்பர் 15-ம் தேதி முதுகுளத்தூர் சார்நிலைக் கருவூலத்தில் செய்த தணிக்கையின் போது, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஓய்வூதியர்களுக்கான பணப்பரிமாற்ற கணக்கிலிருந்து முனியசாமி பணத்தை மோசடி செய்தது தெரிய வந்தது.
அதனையடுத்து நடந்த விசாரணையில், 7.11.22 அன்று முனியசாமி அக்கணக்கிலிருந்து தனக்கு வேண்டிய நயினார்கோவில் அருகே எஸ்.வி.மங்கலத்தைச் சேர்ந்த நண்பர் ஜீவா என்பவரின் ராமநாதபுரம் பாரத ஸ்டேட் வங்கி கணக்கிற்கு ரூ. 9,24,972 மற்றும் தனது மேலாய்க்குடி கிளை பாரத ஸ்டேட் வங்கியின் கணக்கிற்கு ரூ. 20,00,000 அனுப்பி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனையடுத்து முதுகுளத்தூர் சார்நிலைக் கருவூலத்தின் உதவி கருவூல அலுவலர் செய்யது சிராஜூதீன், அளித்த புகாரின் பேரில் கணக்காளர் முனியசாமி ரூ. 29,24,972 மோசடி செய்ததாக, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் மோசடி செய்த பணம் ரூ. 29,24,972-ஐ முதுகுளத்தூர் பாரத ஸ்டேட் வங்கி மூலம் தான் எடுத்த கருவூல கணக்கில் முனியசாமி செலுத்திவிட்டார்.
அன்று முதல் அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். அதனையடுத்து முனியசாமி மாவட்ட கருவூல அலுவலகத்தில் பணியாற்றிய காலத்தில் மோசடி ஏதும் செய்துள்ளாாரா என கருவூல மற்றும் கணக்குத்துறை மதுரை மண்டல இணை இயக்குநரின் ஆய்வுக்குழுவினர் 10 நாட்களுக்கும் மேலாக தணிக்கை செய்தனர். தணிக்கையில் முனியசாமி முறைகேடுகள் செய்துள்ளது தெரிய வந்தது.
அதனையடுத்து மாவட்ட கருவூல அலுவலர் சேஷன், கணக்காளர் முனியசாமி கடந்த 04.06.2018 முதல் 21.09.2020 வரையிலான காலத்தில் ஏடிபிபிஎஸ் (தானியங்கி கருவூல பட்டியல் வழங்கும் முறை) மென்பொருள் முறையில் போலியாக பட்டியல்கள் தயாரித்து, தனது வங்கிக் கணக்கு, தனது மனைவி, நண்பர் ஜீவா மற்றும் உறவினர்கள் வங்கி கணக்குகளுக்கு ரூ. 1,88,74,719 அனுப்பி மோசடி செய்துள்ளார்.
அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரையிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் முனியசாமி மீது வழக்கு பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.