நான் லஞ்சம் வாங்கியது உண்மைதான். தலைவர் சொல்லித்தான் வாங்கினேன்.. நகர் மன்ற கூட்டத்தில் திமுக தலைவரை பகிரங்கமாக மாட்டி விட்ட திமுக கவுன்சிலரால் பரபரப்பு ..

கூடலூர் ;
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 7வது வார்டு திமுக கவுன்சிலர் சத்யசீலன். தன் வார்டுக்குட்பட்ட பகுதியில் வீடு கட்டுவதற்கான தடையில்லா சான்று மற்றும் அனுமதி பெற இவர் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. பொதுவாக இப்படிப்பட்ட வீடியோக்கள் வெளியானால், நான் வாங்கவில்லை இது பொய்குற்றச்சாட்டு என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் மறுப்பார்கள் .
ஆனால், சத்யசீலனோ, தான் லஞ்சப்பணம் வாங்கியது உண்மை தான் என்றும், லஞ்சப்பணத்தை திமுக நகர்மன்றத்தலைவர் பரிமலா வாங்கச் சொன்னதாலேயே தான் அதை வாங்கியதாகவும் நகர்மன்றக்கூட்டத்திலேயே தெரிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
அதுமட்டுமல்ல.. தான் அந்த பணத்தை வாங்கிக்கொடுத்தததற்காக எனக்கு 5000 ரூபாய் கமிஷன் தந்ததாகவும் சொல்லி அனைவரையும் அலற விட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகர்மன்ற தரப்பிலும் குரல்கள் எழுந்ததால், அவையில் காரசார விவாதம் பற்றிக்கொண்டது.
இந்த விவகாரத்தில் விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை உறுப்பினர்கள் சிலர் முன்வைக்க, ஒரே கட்சியை சேர்ந்தவர்களே இப்படி நடந்துகொள்ளலாமா என்ற பேச்சுக்கும் இது காரணமாகிவிட்டது.
நகர் மன்றத்திலேயே திமுக கவுன்சிலர் ஒருவர் தான் லஞ்சம் திமுக தலைவருக்காக வாங்கினேன் என ஒப்புக்கொண்டசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.