தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்… ஆனந்த கண்ணீருடன் ஹேப்பி நியூ இயர் சொல்லி மகிழ்ந்த தேமுதிகவினர்…

சென்னை;
கம்பீரமான உருவம். துணிச்சலான பேச்சு. கருணாநிதி, ஜெயலலிதா இருந்த போதே அரசியல் செய்தவர். முதல் தேர்தலிலேயே 8 சதவீத வாக்குகள். 2011ல் எதிர்க்கட்சி அந்தஸ்து உடன் சட்டமன்றத்தில் கெத்து காட்டிய ஒரே நபர் கேப்டன் விஜயகாந்த் .
ஆனால் 2016 சட்டமன்ற தேர்தலில் தொடங்கிய சறுக்கலில் இருந்து இன்று வரை மீள முடியவில்லை.
இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் முதன்மையான விஷயமாக பார்க்கப்படுவது விஜயகாந்தின் உடல்நிலை. தொடர்ந்து மருத்துவ சிகிச்சை, மாத்திரை, மருந்துகள் என அவரது உடலின் நிலையை பற்றி கவலைப்படும் சூழல் ஏற்பட்டது. இனிமேல் ஓய்வெடுப்பது தான் விஜயகாந்திற்கு சரியாக இருக்கும் என்று சொல்லப்பட்டாலும் அரசியல் ஆதாயத்திற்காக அவர் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவது மிகவும் சங்கடமான நிகழ்வாக மாறி வருகிறது.

தேர்தல் பிரச்சாரத்திற்காக வேனில் அழைத்து வந்தது , கூட்டத்தில் அமர வைக்கப்பட்டது, சுதந்திர தின விழாவில் மிக மிக சிரமப்படுத்தி கொடியேற்ற வைத்தது என சர்ச்சைகள் வரிசைகட்டி நிற்கின்றன.
இதற்கிடையில் விஜயகாந்தின் வலது காலில் மூன்று விரல்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பல மாதங்களுக்கு பின்னர் பொதுவெளியில் மீண்டும் வந்துள்ளார் விஜயகாந்த்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தொண்டர்கள் முன்பு இன்று (ஜனவரி 1, 2023) தோன்றினார். நகரும் நாற்காலியில் உதவியாளர் ஒருவருடன் அழைத்து வரப்பட்டார். அவருக்கு அருகே மனைவி பிரேமலதா, மகன்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அங்கு திரளாக கூடியிருந்த தொண்டர்கள் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். அதற்கு தனது கை விரல்களை உயர்த்தி தம்ஸ்-அப் செய்வது போல காண்பித்தார். அப்போது தேமுதிக தொண்டர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை விஜயகாந்த் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.