சபரிமலை பம்பை நதியில் அதிகப்படியான பாக்டீரியாக்கள்… வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட் …

திருவனந்தபுரம்,
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சபரிமலை வரும் பக்தர்கள் அங்குள்ள பம்பை ஆற்றில் புனித நீராடுவது வழக்கம். அதன்படி, பல்வேறு இடங்களில் இருந்து வரும் அய்யப்ப பக்தர்கள் பம்பை ஆற்றில் அனைத்து பகுதிகளிலும் புனித நீராடி வருகின்றனர்.
இதுபோல அங்கு பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்தும் வருகின்றனர்.
இந்நிலையில், பம்பை நதியில் கோலிபார்ம் என்கிற பாக்டீரியாக்கள் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின்போது பம்பை நதியில் வாரத்திற்கு ஒரு முறை கோலிபார்ம் பாக்டீரியாக்களின் அளவு பரிசோதனை செய்யப்படுகிறது.
இதில் மொத்த கோலிபார்ம் மற்றும் பீக்கல் கோலிபார்ம் அளவு பரிசோதிக்கப்படுகிறது. இதில் கோலிபார்ம் என்பது மொத்த பாக்டீரியாக்களின் தொகுப்பாகும். மொத்த கோலிபார்மின் அளவு 500-க்கு மேல் இருந்தால் குளிக்க உபயோகிக்க முடியாது. ஆனால், பம்பை நதியில் கோலிபார்ம் பாக்டீரியாக்களின் அளவு 6000-க்கும் மேல் கடந்துள்ளது.
இதற்கு, பம்பை நதியில் குளிப்பதும் அவர்களது ஆடைகளை ஆற்றிலேயே விட்டு செல்வதும் பாக்டீரியாக்கள் அதிகரிப்பதற்கான காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. கோலிபார்ம் பாக்டீரியாக்கள் நிறைந்த தண்ணீரில் குளித்தால் டைபாய்டு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், பாக்டீரியாக்களை கட்டுப்படுத்த குள்ளார் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.