தமிழக அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் முன்பே பெட்ரோல் ஊற்றி தங்களை கொளுத்தி கொள்ள முயன்ற கிராமத்தினர்..பரபரப்பு ..

மதுரை ;
அமைச்சர் மூர்த்தி முன்பு பாலமேடு, அவனியாபுரம் கிராம மக்கள் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொள்ள முயன்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் குறித்து மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அவனியாபுரத்தில் மதுரை மாநகராட்சி நிர்வாகம் இணைந்து விழா ஏற்பாடுகளை செய்து தருவதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராமத்தினர், ஜல்லிக்கட்டு போட்டியை கிராம நிர்வாக கமிட்டி நடத்த வேண்டும் என்றார்கள்.
அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அங்கு கூச்சல் எழுந்தது. இதை அடுத்து அமைச்சர் மூர்த்தியும், அதிகாரிகளும் அங்கிருந்து வெளியேறினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவனியாபுரம் கிராமத்தினர் அமைச்சர் மூர்த்திக்கு எதிராக கண்டன கோஷமிட்டனர். ஜாதியத்திற்கு துணை போகும் அமைச்சர் மூர்த்தியை கண்டிக்கிறோம் என்று கோஷமிட்டனர்.
கிராமத்தின் நிர்வாக கமிட்டி ஜல்லிக்கட்டு நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் தங்கள் மேல் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு எரித்துக் கொள்வதாக கூறினார்கள் . சிலர் அங்கேயே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.