மின் இணைப்பு மாற்றி தர ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர்… கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்..

திருச்சி:
கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரின் தந்தை பெரியநாயகம் பெயரில், உறையூர் சவேரியார் கோயில் தெருவில் சொந்தமாக வீடு உள்ளது. அந்த வீட்டை மருத்துவமனை நடத்த வாடகைக்கு விட்டுள்ளார். இதன் காரணமாக, வீட்டின் மின் இணைப்பினை வீட்டு மின் இணைப்பில் இருந்து வணிக மின் இணைப்பாக மாற்றுவதற்கு தென்னூர் மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு உறையூர் பகுதிக்குரிய கணக்கீட்டாளர் ஜெயச்சந்திரன் என்பவர் உங்களுடைய வீட்டை கமர்சியலுக்கு வாடகைக்கு விட்டுள்ளீர்கள். நான் அறிக்கை எழுதி உங்களுக்கு அபராதம் விதித்தால் 80 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அபராதம் வரும். அது வராமல் செய்ய வேண்டும் என்றால் 15 ஆயிரம் ரூபாய் தனக்கு லஞ்சமாகக் கொடுத்தால் Tariff Change செய்து கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.
அதற்கு சந்தோஷ், தன்னால் அவ்வளவு பணம் தர இயலாது என்று தெரிவித்தார். இதையடுத்து 3000 ரூபாய் குறைத்துக் கொண்டு 12 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் Tariff Change செய்து கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சந்தோஷ் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான குழுவினர் சந்தோசுக்கு சில ஆலோசனை அளித்தனர்.
அதன்படி சந்தோசிடமிருந்து ஜெயச்சந்திரன் ரூபாய் 12000 லஞ்சமாக வாங்கும் போது தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெயச்சந்திரனை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.