ஒரே இரவில் தொடர்ச்சியாக 10 க்கும் மேற்பட்ட கடைகளில் கொள்ளையடித்து சென்ற திருடர்கள்.. போலீசார் அதிர்ச்சி ..

தர்மபுரி;
தர்மபுரி மாவட்டம், பொம்மிடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டவுன் பகுதி, சேலம் ரோடு பகுதியில் திரையரங்கு அருகில் ஐஸ்கிரீம் கடை ஒன்று உள்ளது. அந்த கடையில் நள்ளிரவில் இரண்டு திருடர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லாப்பெட்டியில் இருந்த 1200 ரூபாயை எடுத்துக் கொண்டு ஐஸ்கிரீம் எடுத்து சாப்பிட்டு விட்டு வெளியேறியுள்ளனர்.
மேலும் இவர்கள் பொம்மிடியில் உள்ள கடைவீதியில் கம்ப்யூட்டர் சென்டர், மளிகை கடை, துணிக்கடை, மரப்பட்டறை, பேக்கரி என பத்துக்கும் மேற்பட்ட கடைகளில் பூட்டுகளை உடைத்து சிறு சிறு தொகைகளை திருடி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் அனைத்தும் ஒரே நள்ளிரவில் நடைபெற்றதால் யாருக்கும் தெரியவில்லை. காலை நேரத்தில் கடைகளின் உரிமையாளர்கள் வந்து பார்த்தபோது தான் திருடர்கள் கைவரிசை காண்பித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கடை உரிமையாளர்கள் ஒருவர் பின் ஒருவராக புகார் அளிக்கவே, இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான காவல் துறையினர் அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்து வருகின்றனர்.