கோயிலுக்குள் சென்றதால் பட்டியலின இளைஞரை ஊருக்கு நடுவே நிற்க வைத்து ஆபாசமாக திட்டிய திமுக ஒன்றிய செயலாளர்…அதிர்ச்சி வீடியோ… தீண்டாமையின் உச்சம் …

சேலம் ;
சேலம் அருகே கோவிலுக்குள் நுழைய முயன்ற பட்டியலின இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினரை, திமுக பிரமுகர் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் அருகே உள்ள திருமலைக்கிரி கிராமத்தை சேர்ந்த இளைஞர் பிரவீன்குமார். பட்டியலினத்தை சேர்ந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன் அந்த கிராமத்தில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட முயன்றுள்ளார்.
அப்போது, அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் திரும்பி சென்றுள்ளார். இந்த விவகாரம் அறிந்த திருமலைக்கிரி ஊராட்சி மன்ற தலைவரும், சேலம் ஒன்றிய திமுக செயலாளருமான மாணிக்கம், கடந்த 27ஆம் தேதி மாரியம்மன் கோவில் முன்பு பஞ்சாயத்து நடத்தி உள்ளார்.
அப்போது, பட்டியலினத்தை சேர்ந்த பிரவீன்குமார் மற்றும் அவரது பெற்றோரை ஆபாசமாகவும், அவதூறாகவும் சாதிய வன்மத்துடன் பேசிய மாணிக்கம், தங்களை பகைத்துக் கொண்டு தொழில் செய்ய முடியாது என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த காட்சிகளை சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில், இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், பட்டியலின மக்களை கோவிலுக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, அவதூறாக பேசிய திமுக நிர்வாகி மாணிக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சேலம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரான மாணிக்கம் கட்சியில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.