கோவில்கள் பெயரில் தனிநபர்கள் நடத்தும் போலி இணையதளங்களை உடனடியாக முடக்க ஐகோர்ட் அதிரடி உத்தரவு…

கோவில்கள் பெயரில் தனிநபர்கள் நடத்தும்  போலி இணையதளங்களை உடனடியாக முடக்க ஐகோர்ட் அதிரடி உத்தரவு…

மதுரை ;

தமிழகத்தில் சென்னை கபாலீஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், பழனி முருகன் கோவில் உள்ளிட்ட பல பிரபல கோவில்களின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி, காணிக்கை வசூல் செய்து மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அந்த இணையதளங்களை முடக்கவும் உத்தரவிடக் கோரி, ராமநாதபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் மார்கண்டன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணன் அமர்வு வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில், இன்று நீதிபதிகள் உத்தரவை வெளியிட்டனர். அதில்,

1.தமிழகம் முழுவதும் கோவில் பெயரில் உள்ள அங்கீகரிக்கப்படாத, சட்டவிரோதமான, போலி இணையதளங்களை முடக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2.அந்த இணையதளங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற வருவாயை, சைபர் கிரைம் காவல்துறை மூலமாக கண்டறிந்து கணக்கிட்டு, அவற்றை பறிமுதல் செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

3. தகவல் தொழில்நுட்பத்துறை மூலமாக, கோவில்களின் அங்கீகரிக்கப்பட்ட இணையதள முகவரிகளை தெரியபடுத்தி, போலி இணையதள முகவரிகள் எந்த வகையில் இருந்தாலும், முடக்க வேண்டும்.

4.அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்களில் பூஜைகள், நன்கொடை வழங்குவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5.கோவிலின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி இணையதளங்கள் குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.

6. போலி இணையதளங்கள் குறித்து புகாரளிக்க தனி அலுவலரை நியமிப்பதோடு, தனி தொலைபேசி எண்ணையும் உருவாக்க வேண்டும்.

7. அது போல புகார் எழுந்தால் உடனடியாக விசாரித்து, போலி இணையதளங்களை இயக்குவோர் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8.சைபர் கிரைம் காவல்துறையினரும் இது போன்ற புகார்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதோடு, சுழற்சி முறையில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை வேண்டும்.

9. கோவில் சேவைகளுக்கான கட்டணம் குறித்து கோவில்களில் விளம்பரம் வைக்கப்பட வேண்டும். அப்போது தான் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டால் பக்தர்கள் புகார் அளிக்க இயலும். கோவில்களில் உண்டியல்களை வைத்து அவற்றிலேயே காணிக்கைகளை செலுத்த அறிவுத்த வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்கள் மூலம் செலுத்த அறிவுறுத்த வேண்டும்.

10.திருமணத்திற்கான கட்டணம், நன்கொடை போன்றவை கோவில் நிர்வாகத்தால் வசூலிக்கப்படுகையில் உரிய ரசீது கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். அந்த தொகை தொடர்பான கணக்குகள் முறையாக பராமரிக்கப்பட்டு,  தணிக்கை செய்யப்பட வேண்டும். 

11. கோவில் அர்ச்சகர்கள், புகைப்பட கலைஞர்கள், வழிகாட்டிகள் மற்றும் அலுவலர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். இதனால் மூன்றாம் நபர்கள் தேவையற்று கோவிலினுள் நுழைந்து கட்டணம் வசூலிப்பது தடுக்கப்படும். அது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

12.கோவிலினுள் நடைபெறும் செயல்பாடுகளை முறைப்படுத்த வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், அதனை கண்காணித்து சட்டவிரோதங்கள் இருப்பின், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

13. திருப்பதி , சபரிமலை கோவில்களைப் போல தமிழக கோவில்களின் செயல்பாடுகள் முறையாக, வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள்,  இந்த உத்தரவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டது தொடர்பாக 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply