முதல்வருக்கு குடுக்க மனசு இருக்கு… ஆனா இவர்தான் அத தடுக்குறார் னு என் மேல வதந்தி பரப்பறாங்க .. தமிழக அமைச்சர் வேதனை ….

சென்னை:
தியாகராய நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் வளர்ந்து வரும் அரசியல் தலைவர்களுக்கான தலைமை பண்பு, அரசு கொள்கை புரிதல், திட்டமிடுதல் மற்றும் செயல்திட்டம் குறித்த ‘தலைவா’ என்ற தலைப்பில் மூன்று நாள் கருத்தரங்கை தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
‘அரசியல் முன் அனுபவம் இல்லாமல் 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் முதல்முறையாக வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டேன். தொடர்ந்து, இரண்டாவது முறையாக மீண்டும் 2021ஆம் ஆண்டு தேர்தலில், வாய்ப்பு வழங்கப்பட்டதில் வெற்றி பெற்றேன். பின்னர் முதல்முறையாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அதில் மிக முக்கியமான துறையான நிதித்துறை வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள நிதியமைச்சர்கள் மிக மூத்த தலைவர்களாக, கட்சியில் 2ஆம் இடத்தில் இருக்கும் தலைவர்களுக்கு தான் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், திமுக தலைவர் தனக்கு இந்தப் பொறுப்பை வழங்கியுள்ளார்.
அதனால் சிறப்பாக செயலாற்ற வேண்டியது எனது கடமை. தமிழ்நாட்டில் நிதிச்சுமை அதிகமாக உள்ளது. அதனை சரி செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. அதனால், ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கும் நிதியில் பெரும் பங்கு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கே செலவாகிறது. குறைந்த நிதி மட்டுமே வளர்ச்சிப் பணிகளுக்காக செலவாகிறது.
இதனால், அரசு துறைகளால் லாபம் ஈட்டுவதற்கு சிரமமாக உள்ளது. இதனைப் புரிந்து கொள்ளமாமல் ஜாக்டோ ஜியோ போன்ற அரசு ஊழியர்கள் நிலுவைத்தொகையை விடுக்க மனமில்லை என தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஊக்கத்தொகை வேண்டும், ஊதிய உயர்வு வேண்டும் என வலியுறுத்தி வருவதோடு, முதலமைச்சருக்கு செய்ய மனமிருக்கிறது. ஆனால், நிதியமைச்சர் பிடிஆர் தான் நிதி வழங்க மறுக்கிறார் என தன் மீது தவறான வதந்தியை பரப்பி வருகின்றனர்’ என அவரே வேதனைப் பட தெரிவித்தார்.
’அரசியலில் தலைவர்களுக்கு மனிதநேயம், செயல்திறன் மிக முக்கியமானதாக இருக்க வேண்டும். இவை இரண்டும் இருந்தால் மட்டுமே மக்களை சந்திக்க முடியும்’ எனவும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.