2 கிமீ தூரம் ரயில்வே தண்டவாளத்தை ஆட்டையை போட்ட திருடர்கள் …இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட்…

பீகார் ;
பிகார் மாநிலம் சமாஸ்திபூர் மாவட்டத்திலுள்ள பாண்டோல் ரயில் நிலையம் அருகே இரண்டு கிலோ மீட்டர் தூரம் ரயில்வே தண்டவாளம் அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தர்பங்கா ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் முதல் கட்ட விசாரணைக்கு பிறகு ரயில்வே கோட்டத்தின் பாதுகாப்பு ஆணையர் உள்பட் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ரயில்வே வாரியத்தின் அலுவவர் கூறியதாவது: “பாண்டோல் ரயில் நிலையத்தில் இருந்து மதுபாணி அருகே அமைந்திருக்கும் லோகத் சர்க்கரை ஆலை வரையிலான இரண்டு கிலோ மீட்டர் தண்டவாளம் களவாடப்பட்டுள்ளது. அந்த சர்க்கரை ஆலை முடிய பிறகு பல ஆண்டுகளாக இந்த இணைப்பு ரயில் தண்டவாளம் பயன்பாட்டில் இல்லை.
இந்த விவகாரத்தில் ஜகான்ஜர்பூர் ரயில்வே போஸ்ட் பொறுப்பாளர் ஸ்ரீனிவாஸ், பராமரிப்பு உதவியாளர் முகேஷ் குமார் சிங் என இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படுகிறது” என்றார்.
இதற்கிடையே இந்த திருட்டு சம்பவம் ரயில்வே உயர் அலுவலர்கள் உதவியுடன் நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த மாதம் 24ஆம் தேதி நிகழ்ந்த நிலையில், இதுவரை திருட்டு தொடர்பாக எந்த துப்பும் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.