முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் ஓய்வூதியம் ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்படும் … மருத்துவபடியையும் உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

சென்னை,
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று பேசிய செந்தில்குமார் (அ.தி.மு.க.), கோவி செழியன் (தி.மு.க.), அருள் (பா.ம.க.) உள்ளிட்ட உறுப்பினர்கள் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட்டது.
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவிப்பை வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இங்கே உறுப்பினர்கள் எடுத்து வைத்திருக்கிற கோரிக்கையின் அடிப்படையிலே, இப்போது அரசுக்கு இருக்கக்கூடிய நிதிநிலை சூழ்நிலைக்கேற்ப, ஓர் அறிவிப்பை நான் வெளியிட விரும்புகிறேன்.
இங்கே உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஓய்வூதியத்தையும், மருத்துவப் படியையும் உயர்த்தித்தர வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள். அதனடிப்படையில், பின்வரும் அறிவிப்புகளை அறிவிப்பதில், உங்களோடு சேர்ந்து நானும் ஓரளவிற்கு மகிழ்ச்சி அடைந்து, அவற்றை அறிவிக்கிறேன்.
முன்னாள் சட்டமன்ற பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய மாத ஓய்வூதியம் ரூ.25 ஆயிரம் என்பது ரூ.30 ஆயிரமாக, கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஜூன் மாதம் முதல் உயர்த்தப்படும்.
அதேபோல் தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய குடும்ப ஓய்வூதியம் மாதம் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரத்து 500 என்பது மாதம் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும். அதேபோல், முன்னாள் சட்டமன்ற பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு, தற்போது ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப்படி ரூ.50 ஆயிரம் என்பது, ரூ.75 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு சபாநாயகர் மு.அப்பாவு நன்றி தெரிவித்தார்.