தினமும் 12 மணி நேர வேலை… சட்டசபையில் தொழிலாளர் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது.. கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பு பலனில்லை …

தினமும் 12 மணி நேர வேலை… சட்டசபையில் தொழிலாளர் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது.. கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பு பலனில்லை  …

சென்னை;

தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின் வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் கடும் எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்டது.

தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது.

அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் கணேசன் தாக்கல் செய்தார். அப்போது, வேலை நேரத்தை உயர்த்துவதற்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

மத்திய அரசு கொண்டுவந்த தொழிலாளர்களுக்கு எதிரான மசோதாவை தமிழ்நாடு அரசு நிறைவேற்றக் கூடாது என சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தினார்.

தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் இந்த மசோதாவை ஆய்வு குழுவிற்கு அனுப்பி முறைப்படுத்தி சரி செய்ய வேண்டும் என விசிக சட்டமன்ற குழு தலைவர் சிந்தனை செல்வன் தெரிவித்தார்.

இந்த சட்டத்திருத்த மசோதா தொழிலாளர் நலன்களுக்கு எதிரானது என சட்டமன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழு தலைவர் நாகை மாலி எதிர்ப்பு தெரிவித்தார். 

மேலும், தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என சட்டமன்ற பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார். கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக இந்த மசோதா குறித்து விளக்கம் அளித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை என்பதில் மாற்றமில்லை என கூறினார்.

இதன்மூலம், வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை செய்ய இந்த மசோதா வழிவகை செய்வதாகவும், இதனை நடைமுறைப்படுத்துவது அந்தந்த நிறுவனங்களின் விருப்பம் என்றும் கூறினார்.

Leave a Reply