அதிகாரிகள் ஒழுங்கா வேலை செய்யவில்லையா? “நாக்கில் நரம்பில்லாமல் பேசாதீர்கள்”… நேரம் காலம் பாக்காம வேல செஞ்சு எனக்கே சுகர் வந்திருச்சு … விவசாயிடம் கொந்தளித்த கலெக்டர்…

அதிகாரிகள் ஒழுங்கா வேலை செய்யவில்லையா? “நாக்கில் நரம்பில்லாமல் பேசாதீர்கள்”… நேரம் காலம் பாக்காம வேல செஞ்சு எனக்கே சுகர் வந்திருச்சு … விவசாயிடம் கொந்தளித்த கலெக்டர்…

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் நடப்பது வழக்கம்.

இந்நிலையில் (ஏப்.21) விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் நடந்தது. அப்போது, அக்கூட்டத்தில் பங்கேற்ற ஏராளமான விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இருந்தனர். இந்நிலையில், விவசாயிகள் தங்களின் குறைகளை ஒவ்வொருவராக மாவட்ட ஆட்சியரிடம் கூறி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து, இந்த கூட்டத்தில் விவசாயி ஹாகீர் ஷா என்பவர்

‘அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உட்பட அனைவரும் மெத்தனப்போக்கோடு செயல்படுகிறார்கள்’ என குற்றம்சாட்டினார். இதைக் கேட்ட, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் ஆவேசமடைந்தார்.

“மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் வேலை செய்யவில்லை என்று உங்களுக்குத் தெரியுமா? நான் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் வேலைசெய்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா?. நள்ளிரவைத் தாண்டியும் அனைத்து கோப்புகளை படித்துப் பார்த்து கையெழுத்து போட்டுவிட்டு தான், நான் உறங்கச் செல்கிறேன்” என்றும் ஆவேசத்துடன் உரையாற்றினார்.

 விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஏதோ பேச வேண்டும் என்று பேச வேண்டாம், அதிகாரிகள் வேலை செய்யவில்லை என்றால் என்னிடம் தனிப்பட்ட முறையில் வந்து தெரிவியுங்கள். அவர்களைப் பற்றி அவதூறாக பொதுவெளியில் பேசக்கூடாது” என்று காட்டமாக பதிலளித்தார்.

மேலும் பேசிய அவர், “அதிகாரிகள் மற்றும் நான் உட்பட ஒவ்வொரு கூட்டத்திலும் மனுக்களை பெற்றுக்கொண்டு பசியுடன் 4:00 மணிக்கு மேல் செல்கின்றோம்.

பல அதிகாரிகள் சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தும் பல சமயங்களில் மூன்றரை மணி, நான்கு மணி, நான்கரை மணி என உணவருந்த செல்கிறோம். இத்தகைய நிலையில், தனக்கும் சர்க்கரை நோய்ப்பாதிப்பு வந்து ஆறு மாதம் ஆகிவிட்டது.

அது உங்களுக்கு தெரியுமா?” என்று கேள்வியெழுப்பியவாறே ”நாக்கில் நரம்பில்லாமல் பேசாதீர்கள்” என குற்றம்சாட்டியவரை பார்த்து ஆவேசமாக பொங்கி எழுந்தார். இந்த காரசாரமான விவாதம் விவசாயிகள் இடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பு ஏற்படுத்தியது.

அதிகாரிகள் அனைவரும் பசி பட்டினியுடன் வேலை செய்து வருகின்றோம்” என்று ஆட்சியர் கூறும்போது அதிகாரிகள் அனைவரும் கைத்தட்டி ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply