உங்கள் தந்தை உங்களுக்கு வைத்த பெயருக்காவது நியாயமாக இருங்கள்… முதல்வர் ஸ்டாலினுக்கு கே. பாலகிருஷ்ணன் கண்டனம்…

சென்னை ;
தமிழக சட்டசபையில் தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் வேலை என்ற சட்ட திருத்த மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இதற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகளே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
நாங்கள் ஏற்கனவே சொன்னதுபோல ஒவ்வொரு அமர்விலும் தங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில்தான் நீதிபதிகள் தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்.
ஏற்கனவே இதுபோன்ற ஒரு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தபோது நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். இப்போது அதே சட்டத்தை ஏன் தி.மு.க. அரசு கொண்டு வர வேண்டும்?
இது கார்ப்பரேட்களுக்கு சேவை செய்வதை போல இருக்கிறது. இந்தியாவில் முதன் முதலில் மே தின கொண்டாட்டத்தை நடத்தியது தமிழ்நாட்டில் தான் இப்படி இருக்கையில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டம் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
எட்டு மணி நேர வேலை பாட்டாளிகளின் அடிப்படை உரிமை அந்த உரிமையை பறிப்பவர்கள் எவராக இருந்தாலும் வரலாற்றில் பாட்டாளிகளின் விரோதிகளாகவே அவர்கள் அடையாளப் படுத்தப்படுவார்கள்.
வேலை நேரம் உயர்த்தப்பட்டால் அது தி.மு.க.வின் வரலாற்றில் அழியாத கரும்புள்ளியாகவே இருக்கும். உங்கள் தந்தை உங்களுக்கு வைத்த பெயருக்காவது நியாயம் செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.