மதுபானம் பரிமாற அனுமதி – தமிழ்நாடு அரசு ,,, ஒருபோதும் அனுமதியில்லை- தமிழக அமைச்சர்… பொதுமக்களை குழப்பும் தமிழக அரசாணையும், அமைச்சரின் அறிவிப்பும்…

சென்னை,
திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாறவும், மதுபானம் பயன்படுத்தவும் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாவட்ட கலெக்டர்கள் அனுமதியுடன், மதுவிலக்குத்துறை சிறப்பு அனுமதி வழங்கலாம் என புதிய சட்டத்திருத்தத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம் உரிய அனுமதி பெற்று இனி திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பயன்படுத்தலாம்.
கட்டணம் செலுத்தி மதுபானம் பயன்படுத்த அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
“திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு ஒருபோதும் அனுமதியில்லை. சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் மட்டும் மதுபானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இந்த நடைமுறை இருக்கிறது.
ஐ.பி.எல். போன்ற விளையாட்டு போட்டிகளில் மதுபானங்களுக்கு அனுமதி கேட்டிருந்த நிலையில் அதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மற்ற மாநிலங்களில் விளையாட்டுப் போட்டிகளில் மதுபானங்களுக்கு அனுமதி உள்ளது” என்று கூறினார்.
திருமண மண்டபங்களில் லைசென்ஸ் பெற்று மது அருந்தலாம் என உள்துறை செயலாளர் அறிவித்திருந்த நிலையில் அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவேளை அமைச்சருடன் கலந்தாலோசிக்காமல் உள்துறை செயலாளர் திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அறிவிப்பை வெளியிட்டு விட்டாரோ என்று பொது மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.