நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன் என்பதால் என்னையும் எனது வார்டையும் புறக்கணிக்கிறார்… திமுக மேயரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்..

திருநெல்வேலி ;
திருநெல்வேலி மாநகராட்சி சாதாரன கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கடந்த கூட்டத்தில் ஒத்தி வைக்கப்பட்ட தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் தீர்மானமாக கொண்டு வரப்பட்டது . இதற்கு சில கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மாநகராட்சி கூட்ட அரங்கில் வைக்கப்பட்டுள்ள வருகை பதிவேட்டு 27 கவுன்சிலர் மட்டுமே கையெழுத்து போட்டனர். அப்போது ஏற்கனவே நிறைவேற்றாத தீர்மானங்களும் வாசிக்கும் போது அந்த தீர்மானங்களை கடந்த கூட்டத்திலேயே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாங்கள் தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது என தெரிவித்துள்ளோம் என திமுக கவுன்சிலர் தெரிவித்தார்.
அப்போது இல்லை இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என மேயர் சரவணன் தெரிவித்துள்ளார். அப்படி என்றால் இந்த கூட்டத்திற்கான பெரும்பாலான கவுன்சிலர்கள் ஆதரவு இல்லை எனக் கூறி வருகை பதிவேட்டில் 27 பேர் தான் கையெழுத்து போட்டனர்.
28 கவுன்சிலர்கள் கையெழுத்து போட்டால்தான் தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். தற்போது நெல்லை மாநகராட்சியில் 55 கவுன்சிலர்களில் ஒருவர் மேயராகவும் மற்றொருவர் துணைமேயராவும் உள்ளார்.
ஆகவே இந்தக் கூட்டத்திற்கான மெஜாரிட்டி கவுன்சிலர்கள் இல்லை என தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து திமுக மேயர் சரவணனுக்கும் கவுன்சிலருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து திமுக கவுன்சிலர் 15வது வார்டு அஜய் திடீரென எழுந்து எனது வார்டுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை, நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன் என்பதால் மேயர் என்னையும் எனது வார்டையும் புறக்கணித்து வருகிறார்.
இதனால் நான் எனது வார்டு பகுதிக்கு செல்ல முடியவில்லை எனக் கூறி மேயர் இருக்கைக்கு முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை கேட்ட மேயர், உடனடியாக தனது இருக்கையிலிருந்து எழுந்து அவசரமாக வெளியேறினார்.
பின்னர் கூட்ட அரங்கில் இருந்த மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி நேரடியாக அஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து மற்ற திமுக கவுன்சிலர்களும் 15வது வார்டு திமுக கவுன்சிலர் அஜய் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து அஜய் போராட்டத்தை கைவிட்டார். இதனால் நெல்லை மாநகராட்சியின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது