எனது வார்டுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தருவதில்லை… அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது… பதவியை ராஜினாமா செய்த திமுக கவுன்சிலர்.. பரபரப்பு…

கரூர் ;
கரூர் மாவட்டம். பள்ளப்பட்டி நகராட்சித் தலைவராக திமுகவைச் சேர்ந்த முனவர் ஜான் என்ற பெண்மணியும், துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த பள்ளப்பட்டி நகரச்செயலாளர் தோட்டம் பஷீர் என்பவரும் பதவி வகித்து வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளப்பட்டி நகராட்சியில், தனது வார்டுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக்கூறி திமுக கவுன்சிலர் ஒருவர் ராஜினாமா செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளப்பட்டி நகராட்சி திமுக கவுன்சிலர் ஜமால் முகமது,
“பள்ளப்பட்டி நகர்மன்றக் கூட்டத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மக்கள் கோரிக்கையை முன்வைத்து அளிக்கப்பட்ட மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் நகர்மன்றத் தலைவரும், நகராட்சி அதிகாரிகளும் மேற்கொள்ளவில்லை.
நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசுவதற்கு வாய்ப்பு தரப்படுவதில்லை. அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது.
திமுக உறுப்பினராக இருந்த பொழுதும், எனது பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டியதால், இன்று நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் ராஜினாமா கடிதம் வழங்கியிருக்கிறேன்.
35 ஆண்டுகளாக திமுகவில் உறுப்பினராக இருக்கிறேன். ஆளுங்கட்சி கவுன்சிலராக இருந்தும் எனது கோரிக்கைகளை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இது தொடர்பாக கவுன்சிலர்களிடம் பேசுவதும் இல்லை, எல்லாவற்றையும் அவர்களுக்குள்ளாக பேசி முடித்துக் கொள்கிறார்கள்” என்று கூறினார்.
இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் முனைவர் ஜானிடம் கேட்டபோது, “அரசியல் பழிவாங்கும் நோக்கில் சிலரின் தூண்டுதலின் பேரில் திமுக உறுப்பினர் ராஜினாமா கடிதத்தை வழங்கி, தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார். என்று கூறினார்.