காவிரியின் குறுக்கே 9 ஆயிரம் கோடியில்அணை கட்டும் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி பற்றி திமுகவிற்கு தெரியுமா, தெரியாதா? இது பச்சை துரோகம் … சீமான் ஆவேசம் ..

சென்னை;
கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மேகேதாட்டு அணை கட்ட வாக்குறுதி அளித்துள்ளது தமிழர்களுக்கு செய்கின்ற பச்சை துரோகம்’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
`கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட 9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.
காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் சூழ்ச்சியே ஆகும். கர்நாடக மாநிலத்தை மாறி மாறி ஆண்ட காங்கிரஸ்-பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளும் ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதற்காக காவிரியின் குறுக்கே பல்வேறு அணைகளைக் கட்டி காவிரி நீரை தடுத்து நிறுத்தி கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுமைகளை புரிந்தன.
கடந்த 5 ஆண்டு காலமாக கர்நாடக மாநிலத்தை ஆண்ட பா.ஜ.க மேகேதாட்டுவில் அணை கட்ட பல்வேறு முயற்சிகளை எடுத்து, தமிழர்களுக்கு எதிரான அதே துரோக வரலாற்றை தொடர்ந்தது.
அதன் அடுத்த கட்டமாக தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர்வதற்கு முன்பாகவே மேகேதாட்டு அணை கட்ட 9 ஆயிரம் கோடிகளை ஒதுக்குவதாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையிலேயே அறிவித்துள்ளது.
இந்திய கட்சிகள் எப்போதும் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிராக செயல்படும் என்பதையே மீண்டும் ஒரு முறை நிறுவுகிறது. மேகேதாட்டு அணைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே அணை கட்ட நிதி ஒதுக்கப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் அறிவிப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மட்டுமின்றி இந்திய கூட்டாட்சி தத்துவத்தையே கேலி கூத்தாக்கும் செயலாகும்.
இந்திய கட்சிகளின் இத்தகைய ஒரு பக்கச் சார்பான நடவடிக்கைகள், நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் அல்லர் என்ற உணர்வினை ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் வெடித்தெழவே வழிவகுக்கும்.
இதுதான் இந்தியாவின் ஒற்றுமையை காங்கிரஸ் கட்சி கட்டி காப்பாற்றுகின்ற ஆக்கபூர்வமான நடவடிக்கையா? இவற்றையெல்லாம் அனுமதித்துவிட்டு இந்தியாவின் ஒற்றுமை குறித்துப் பேச ராகுல் காந்திக்கு என்ன தகுதி இருக்கிறது? என்ற கேள்வியும் எழுகிறது.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய தேர்தல் பணிக்குழு அமைத்து பாடுபட வேண்டும் என அம்மாநில தி.மு.க-வினருக்கு, தி.மு.க தலைமை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
மேகேதாட்டு அணை கட்டுவதற்கான காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி தி.மு.க விற்கு தெரியுமா? தெரியாதா? ஆதரவு அளிக்கும் முன், மேகேதாட்டு அணை கட்ட எந்த முயற்சியும் எடுக்கப்படாது என்ற உறுதிமொழியை காங்கிரஸ் கட்சியிடம் தி.மு.க ஏன் பெறவில்லை?
காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பாடுபடுவதன் மூலம் காவிரியில் மேகேதாட்டு அணை கட்ட தி.மு.க மறைமுக ஆதரவளிப்பது தமிழ்நாட்டிற்கு செய்கின்ற பச்சைத் துரோகமாகும். எனவே மேகேதாட்டு அணை கட்ட நிதி ஒதுக்கும் தேர்தல் வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
அவ்வாறு திரும்ப பெறவில்லை எனில் கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் முடிவை தி.மு.க கைவிட வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.