கழுத்து வலியை போக்க உதவும் ”உத்தானாசனம்”

ஆசனங்கள் பொதுவாக நின்று செய்பவை, அமர்ந்து செய்பவை, படுத்து செய்பவை என்பதாகவே இருக்கும். மூன்று நிலைகளிலும், முன் வளைதல், பின் வளைதல், பக்கவாட்டில் வளைதல் என்று வளைவதாகவே இருக்கும். அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது நின்று முன் வளையும் ஆசனங்களில் ஒன்றான, துவக்க நிலை ஆசனமான உத்தானாசனம் என்பதாகும்.
உத் என்றால் சமஸ்கிருதத்தில் “சக்தி வாய்ந்த” (powerful) என்று பொருள். “தான்” என்றால் “நீட்டுதல்” என்று பொருள். அதாவது சக்தி வாய்ந்த நீட்டுதல் (powerful stretching) என்று பொருள்.
ஆக, பெயரிலேயே புரிந்திருக்கும் இதன் பயன்பாடு. இந்த ஆசனத்தை பழகுதனால், உடலின் பின் பகுதி முழுவதும் பலம் பெறுகிறது. அடிப்பாதம் துவங்கி, பின்புற கால்கள் மூலம், கீழ், நடு, மேல் முதுகு வரை பரவி கழுத்து வழியக மண்டை வழி நெற்றிக்கு வந்து புருவ மத்தியில் நிற்கிறது. அதனால்தான் இது சக்தி வாய்ந்த ஆசனமாகக்கருதப்படுகிறது.
உத்தானாசனத்தின் மேலும் சில பயன்கள்
உடல் முழுமையையும் நீட்டுகிறது (stretch). மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. தோள்களுக்கு புத்துணர்வு அளிக்கிறது. கழுத்து வலியை போக்க உதவுகிறது. சையாடிக் பிரச்சினை தீர உதவுகிறது
செய்முறை
விரிப்பில் நேராக நிற்கவும். மூச்சை மெதுவாக உள்ளிழுத்து கைகளை தலைக்கு மேலாக உயர்த்தவும். மூச்சை வெளியே விட்டுக் கொண்டே முன்னால் குனிந்து பாதங்களுக்கு வெளிப்புறத்தில் தரையில் கைகளை வைக்கவும்.
நெற்றியை முட்டி மீதோ அதற்கும் கீழாக வைக்க முடிந்தால் வைக்கவும். 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின் முந்தைய நிலைக்கு வரவும்.
அதிக இரத்த அழுத்தம் மற்றும் தீவிர கண் கோளாறு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை பயில்வதை தவிர்க்கவும்.