டாஸ்மாக் பாரில் ரகளை செய்தவர்களை பிடிக்க சென்ற போலீசாரை அரிவாளை காட்டி மிரட்டி தப்பியோடிய கும்பல் … அதிர்ச்சி சம்பவம்….

டாஸ்மாக் பாரில் ரகளை செய்தவர்களை பிடிக்க சென்ற போலீசாரை அரிவாளை காட்டி மிரட்டி தப்பியோடிய கும்பல் … அதிர்ச்சி சம்பவம்….

தூத்துக்குடி :

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பசுவந்தனை சாலையில் பாண்டவர்மங்கலம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாரில் வெள்ளிக்கிழமை இரவு பாண்டவர்மங்கலத்தினை சேர்ந்த கட்டிட தொழிலாளி சக்திவேல் என்பவர் சிலருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

அப்போது, அவரது அருகே மது அருந்திக்கொண்டு இருந்த 4 பேரில் ஒருவர் திடீரென எழுந்து கையில் வைத்திருந்த மது பாட்டிலை கொண்டு சக்திவேல் தலையில் ஓங்கி அடித்தார்.

மேலும் மற்ற 3 பேரும் சக்திவேல் மீது தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி, அங்கிருந்த சேரை எடுத்தும் தாக்கினர். அது மட்டுமின்றி தாக்குதலை தடுக்க முயன்றவர்கள் மீது தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து டாஸ்மாக் பார் நடத்துபவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

 காவல்துறையினர் வந்ததை அறிந்ததும் சக்திவேல் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதையெடுத்து காயமடைந்த சக்திவேலை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, சக்திவேல் மீது தாக்குதல் நடத்திய கும்பல் பின்தொடர்ந்தது மட்டுமின்றி அரிவாளை காட்டி மிரட்டியுள்ளனர்.

போலீசார் அவர்களை பிடிக்க முயன்ற போது போலீசாரையும் மிரட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. சக்திவேல் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இப்பிரச்சினை குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து டாஸ்மாக் பாரில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சக்திவேல் மீது தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர்.

டாஸ்மாக் பாரில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply