கோவை மாவட்டம், சூலூர், கண்ணம்பாளையம், பள்ளப்பாளையம், இருகூர் ஆகிய பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகள்!! – கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு…

கோவை,
கோவை மாவட்டம், சூலூர், கண்ணம்பாளையம், பள்ளப்பாளையம், இருகூர் ஆகிய பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
சூலூர் பேரூராட்சியில் மேம்படுத்தப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றது. இப்பேரூராட்சியில் 4 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. அதில் ஒன்றான கனிம அறக்கட்டளை நிதியிலிருந்து ரூ.4.76 கோடி மதிப்பீட்டில் மதுக்கரை வட்டம், செட்டிபாளையம் கிராமம்- காடுகுட்டைக்கு ஒண்டிப்புதூர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரினை நீரேற்றம் செய்யப்படுகிறது.
இங்கு ஒருநாளைக்கு 2.4 எம்எல்டி நீர் சுத்திகரிக்கப்படுகிறது. இந்த பேரூராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த நீரினை பாசனத்திற்கு பயன்படுத்தலாம். அதற்கு அம்ருத் திட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கோவை மாநகராட்சி மற்றும் இரண்டு நகராட்சிகளில் காலை உணவுத் திட்டம் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டது. அதன் சிறப்பான செயல்பாட்டினால், தற்போது அனைத்து அரசுத் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் மூலம் தொடக்கப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு உணவு சமைத்து வழங்கப்படவுள்ளது. அதே தொடக்கப் பள்ளியில் படிக்கும் குழந்தையின் தாயாக இருக்கும், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்கவேண்டும். இதுபோன்ற தகுதியான சுய உதவிக்குழு உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டு, தரமான, சுவையான உணவு தயாரிக்க பள்ளிகள் திறப்பதற்கு முன்பாகவே பயிற்சி அளிக்கப்படும்.
ஊராட்சி பகுதிகளில் 755 தொடக்கப் பள்ளிகளிலும், பிற நகராட்சி பகுதிகளில் 92 தொடக்கப் பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என கலெக்டர் கிராந்திகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து, இருகூர் பேரூராட்சி பகுதியில் நொய்யல் ஆற்றினை நீர்வளத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் நேரில் பார்வையிட்டு மேற்கொண்டார்.
மேலும், சூலூர் சந்தை ரூ.2.03 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இச்சந்தை 2.41 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு 120 கடைகள் கட்டப்படவுள்ளன. இதனை ஆய்வு செய்த கலெக்டர் பணியினை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
சூலூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிய குடியிருப்புகள் கட்டும் பணி, ரூ.50 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணி, ரூ.45.60 லட்சம் மதிப்பில் சாலையினை பலப்படுத்தும் பணி, கண்ணம்பாளையம் பேரூராட்சியில் ரூ.45 லட்சம் மதிப்பில் யோகா மையத்துடன் கூடிய சுகாதார நிலையம் கட்டும் பணி, பள்ளபாளையம் பேரூராட்சி ரூ.18.15 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கும் பணி, பாரதிபுரம் எக்ஸ்டன்சன் பகுதியில் ரூ.36 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறைகள் கட்டும் பணி, இருகூர் பேரூராட்சியில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா மேம்பாடு செய்யும் பணி, ரூ.15 லட்சம் மதிப்பில் பொதுகழிப்பிடம் கட்டும்பணி ஆகிய பணிகளை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை தரமானதாகவும், விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சுப்ரமணியன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சந்திரசேகர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், கண்ணம்பாளையம் பேரூராட்சி தலைவர் புஷ்பலதா ராஜகோபால், செயல் அலுவலர் புவனேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.