தமிழகத்தில் அடுத்தடுத்த மாவட்டங்களில் கலெக்டர்களாக பணியாற்றும் கணவன் மனைவி …

இராமநாதபுரம் ;
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக விஷ்ணு சந்திரனும் சிவகங்கை மாவட்ட கலெக்டராக ஆஷா அஜித்தும் புதியதாக நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் கணவன்-மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்தவர் ஆஷா அஜித். கேரள அரசின் கல்வித் தொலைக்காட்சியான விக்டர்ஸ் சேனல் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள், நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குதல், கல்வியாளர்களிடம் நேர்காணல் நடத்துதல் என பிசியாக இயங்கியவர்.
2015 ஜூலை 4-ம் தேதி, சிவில் சர்வீஸ் தேர்வில் 40-வது ரேங்கில் வெற்றிபெற்றார். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் சப்-கலெக்டராகவும், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராகவும் பொறுப்புகளில் இருந்துள்ளார்.
தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வந்த ஆஷா அஜித் தற்போது சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்செந்தூர் கோவில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த விஷ்ணுசந்திரன் ஐ.ஏ.எஸ் நெல்லை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டிருந்தார். 2015 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். முடித்து தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றி உள்ள அவர், வருவாய் துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார்.
நெல்லை மாநகராட்சியைப் பொறுத்தவரை பாதாளச்சாக்கடை திட்டம் , ஸ்மார்ட்சிட்டி திட்டப் பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதிகளை தந்து அதற்காக பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொண்டார்.
தற்போது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தம்பதியரான விஷ்ணு சந்திரன்-ஆஷா அஜித் ஆகிய இருவரும் அண்டை மாவட்டங்களில் பணியாற்றும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.