மக்களின் அடிப்படை தேவையான குடிநீரை இலவசமாக வழங்காமல் பாட்டிலில் அடைத்து தமிழக அரசே வியாபாரம் செய்வதா… கேப்டன் விஜயகாந்த் கண்டனம்..

சென்னை ;
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம் முழுவதும் ஆவின் குடிநீர் பாட்டில்களை விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டு, ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. ஆவினின் அனைத்து விற்பனை நிலையங்கள் மூலம் குடிநீர் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாக்கப்பட்ட குடிநீரை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டியது அரசின் கடமை. அவ்வாறு செய்யாமல்குடிநீரை பாட்டிலில் அடைத்து வைத்து விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பது எந்த வகையில் நியாயம்.
குடிநீருக்காக பொதுமக்கள் வரி செலுத்தி வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
முறையாக குடிநீர் வரி செலுத்தி வரும் பொது மக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டுமே தவிர, அதனை விற்பனை செய்ய திட்டமிடுவது எந்த வகையில் நியாயம். அதிமுக ஆட்சியில் அம்மா குடிநீர் விற்பனை செய்த போது தேமுதிக அதை கண்டித்தது.
தற்போது ஆவின் நிறுவனம் சார்பில் குடிநீர் விற்கும் திட்டத்திற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். வரியும் பெற்றுக் கொண்டு இலவசமாக வழங்க வேண்டிய குடிநீரை வியாபாரம் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாதது.
இந்த திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். மேலும் தமிழக முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.