துளசி மாலையை பழனி உண்டியலில் காணிக்கை செலுத்தும்போது தவறி விழுந்த தங்க சங்கிலி… பக்தருக்கு இன்ப அதிர்ச்சி தந்த அறங்காவலர்…

பழனி ;
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த சசிதரன்பிள்ளை மகளான சங்கீதா. இவர் பழனி மலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே செல்லும் வழியில் உள்ள உண்டியலில் துளசி மாலையை கழற்றி உண்டியல் செலுத்த எடுத்தபோது அத்துடன் அணிந்திருந்த சுமார் 1.3/4 பவுன் தங்கச் செயினையும் சேர்த்து தவறுதலாக உண்டியலில் செலுத்தி விட்டார்.
இது குறித்து கேரள பக்தரான சங்கீதா கோவில் நிர்வாகத்திடம்,
‘’நாங்கள் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர். எங்கள் குடும்பத்தின் ஏழ்மை சூழ்நிலை கருத்தில் கொண்டு தவறுதலாக உண்டியல் செலுத்தப்பட்ட தங்க செயினை திரும்ப வழங்கவேண்டும்’’என்று கடிதம் கொடுத்திருந்தார்.
இதுகுறித்து கோவில் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
ஆனால், 1975 சட்டப்படி உண்டியலில் விழுந்த பொருட்கள் திரும்ப வழங்குவதற்கான வழிவகை எதுவும் இல்லாத நிலையில் கேரள பக்தரின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு பழனி திருக்கோவில் அறங்காவலர் குழுவின் தலைவர் சந்திரமோகன், தனது சொந்த செலவில் ஒரு லட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் 17 புள்ளி 460 கிராம் எடையில் தங்கச் செயினை கேரள பக்தர் சங்கீதாவிடம் வழங்கியுள்ளார்.
செயினை பெற்றுக்கொண்ட சங்கீதா குடும்பத்தினர் திருக்கோயில் தலைமை அலுவலகம் வந்து பெற்றுக் கொண்டனர். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.