மணல் கொள்ளையைத் தடுத்த இளைஞரை அரிவாளால் வெட்டி கொடூர தாக்குதல் நடத்திய கும்பல்… பரபரப்பு…

திருப்பத்தூர் ;
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மேலூர் ரோடு பகுதியை சேர்ந்த நீலமேகன் என்பவருக்குச் சொந்தமாக வீடு உள்ளது. வீட்டின் அருகே மர்ம கும்பல் ஒன்று, திருட்டுத் தனமாக மண் எடுத்து வந்ததில் 10 அடிக்குமேல் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, நீலமேகன் மனைவி செந்தாமரை, அவரது மகன் இசையரசு ஆகியோர் ஏன் இப்படி திருட்டுத்தனமாக மணல் எடுக்கிறீர்கள் என்றும் பள்ளத்தைச் சமன் செய்யுமாறு பலமுறை கூறி வந்துள்ளனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று இரவு வீட்டினுள் இருந்த செந்தாமரையை, மணல் அள்ளும் கும்பலை சேர்ந்த தேவராஜ் அவரது மகன் ராஜ்குமார் ஆகியோர் ஆபாசமாகப் பேசி தாக்குதல் நடத்த முயன்று உள்ளனர். அப்போது, செந்தாமரை கூச்சிலிட்ட போது அவரது மகன் இசையரசு தடுத்து உள்ளார்.
பின்னர், மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த ராஜ்குமார், சென்னகேசவன் மகன் ஹரிஷ், சுரேஷ், பவு, செந்தில் ஆகியோர் இசையரசை ஓட ஓட அரிவாளால் வெட்டி உள்ளனர்.
அப்போது, உயிரைக் காப்பாற்ற, பக்கத்தில் உள்ள வீட்டில் செந்தாமரை மற்றும் இசையரசு தஞ்சம் புகுந்தனர். ஆனாலும், அந்த வீட்டின் கதுவு மற்றும் ஜன்னலை உடைத்து மீண்டும் சராமரியாகத் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, இசையரசு பலத்த படுகாயங்களுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.