அதிமுக ஆட்சியை தூக்கி எறிந்ததுபோல, உங்கள் ஆட்சியையும் தூக்கி எறிவோம்… திமுகவை எச்சரித்த வேல்முருகன்…

சென்னை;
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் பண்ருட்டி எம்எல்ஏவுமான வேல்முருகன்,
‘’நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் ஜுன் 3-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பினை வெளியிட வேண்டும்.
தேர்தலுக்கு முன்பாக ஆயுள் கைதிகளாக இருக்கும் இஸ்லாமியர்களை விடுவிக்க வேண்டுமென போராட்டம் நடத்திய போது அதில் திமுகவின் முக்கிய தலைவர்கள் கலந்துக் கொண்டு ஆதரவு தெரிவித்த நிலையில், ஆட்சிக்கு வந்த பிறகு அது குறித்து பேசாமல் இருப்பது எந்த வகையில் நியாயம்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போது எங்கள் கூட்டமைப்பு முன்னெடுத்த போராட்டங்களால் தான் அந்த ஆட்சி தூக்கி எறியப்பட்டது. அந்த நிலைக்கு எங்களை நீங்களும் தள்ளிவிட வேண்டாம் என எச்சரிக்கை செய்ய கடமைப்பட்டுள்ளேன்.
ஒருவேளை எங்களது கோரிக்கையை நிறைவேற்ற தவறினால் ஜுன் மாத இறுதியில் அரசுக்கு எதிராக கோட்டை நோக்கி பேரணியாக செல்வோம்’’ என்றார்.