தமிழக பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை..

சென்னை ;
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2020ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி தருமபுரி ஆட்சியராக இருந்தபோது கொரோனா காலத்தில் கிருமி நாசினி கொள்முதலில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
2018 பிப்ரவரி 28 முதல் 2020 அக்டோபர் 29 வரை, தர்மபுரி மாவட்ட ஆட்சியராக பதவி வகித்தவர் மலர்விழி ஐ.ஏ.எஸ். தற்போது, சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கருவூல காலனியில் உள்ள அவரது வீட்டில் 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
முறைகேடுகள் அடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.