எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை.. ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கலெக்டரிடம் திருப்பி கொடுக்க வந்த பொதுமக்கள்…கோவையில் பரபரப்பு…

கோவை;
கோவை மாவட்டம் பிளிச்சி பஞ்சாயத்து அம்பேத்கர் நகரில் சுமார் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரியமத்தாம்பாளையம் பகுதியில் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் பட்டா வழங்கிய நிலத்திற்கு செல்லும் வழிப்பாதை தனியார் அமைப்பிடம் உள்ளதால் பட்டா நிலம் இருந்தும் அதனை பயன்படுத்த முடியாத சூழல் நிலவி வருகின்றது.
மேலும் இது குறித்து பலமுறை கிராம நிர்வாக அலுவலர் உட்பட பல்வேறு அரசு அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அப்பகுதி மக்கள் அவர்களது ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டமுக்கிய ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடமே திருப்பி கொடுக்க வந்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளாக அரசு ஒதுக்கி தந்த நிலம் உள்ளது ஆனால் வழித்தடம் இல்லை என்பதால் அங்கு வீடு கட்டி வசிக்க முடியாமல் அம்பேத்கர் நகரிலேயே குடிசை வீடுகளில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து பலமுறை கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகளை நேரில் சென்று சந்தித்து கோரிக்கை விடுத்தோம் .
ஆனால் தற்போதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தங்களது அரசு அடையாள அட்டைகளான ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியரிடமே திருப்பித் தர முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தனர்.
கிராம மக்களின் இந்த செயலால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .