ஏய் உட்காருடா, உதை வாங்கப் போற… நாடாளுமன்றத்தில் பாஜக எம்பிக்களை ஒருமையில் பேசிய தயாநிதி மாறன்…

டெல்லி ;
நாடாளுமன்ற மக்களவையில் பாஜக உறுப்பினர்களை பார்த்து திமுக எம்பி தயாநிதி மாறன், ஏய் உட்காருடா உதை வாங்கப் போற என்று சத்தம் போட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நேற்று நாடாளுமன்ற மக்களவையில் சந்திரயான் வெற்றி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசினர். எம்.பி. சசி தரூரைத் தொடர்ந்து, திமுக உறுப்பினர் ஆ. ராசா பேசுவதற்கு அழைக்கப்பட்டார். அப்போது மக்களவையில், சசி தரூர் உள்ளிட்டோர் பேசிய பேச்சு குறித்து உறுப்பினர்கள் சிலர் முழக்கமெழுப்பினர்.
ஆனாலும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது பாஜக எம்பிக்கள் அவரை பேசவிடாமல் கத்தி கூச்சலிட்டனர். இதனால் ஆ.ராசா பேச முடியாத அளவிற்கு இடைஞ்சல் ஏற்பட்டது. பாஜக உறுப்பினர்களின் கூச்சலுக்கு எதிராக திமுக உறுப்பினர்களும் சத்தம் போட்டனர்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த தயாநிதி மாறன் ஆவேசமாக எழுந்து ஏய், உட்காருடா, உதை வாங்கப் போற என்று சத்தம் போட்டார். இந்தக் காட்சிகள் நாடாளுமன்ற தொலைக்காட்சி மூலம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நேற்று முன்தினம் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீது கனிமொழி பேசியபோதும் பாஜக உறுப்பினர்கள் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போதும் ஆவேசமாக எழுந்த தயாநிதிமாறன், பாஜக உறுப்பினர்களை உட்காரச் சொல்லி ஒருமையில் பேசினார்.