ரூ.2 லட்சத்துக்கு குழந்தையை விற்க பெற்றோரிடம் பேரம் பேசிய அரசு மருத்துவமனை டாக்டர் … அதிர்ச்சி சம்பவம்…

நாமக்கல் ;
திருச்செங்கோடு சூரியம்பாளையத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (29). இவரது மனைவி நாகஜோதி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 12ம் தேதி நாகஜோதிக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தையை திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த மருத்துவமனையில் மருத்துவராக அனுராதா என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கரூரைச் சேர்ந்த லோகாம்பாள் (38) என்பவருக்கு தகவலளித்து, ரூ.2 லட்சம் தருவதாக தினேஷ், நாகஜோதியிடம் பேரம் பேசி குழந்தையை விற்க கட்டாயப்படுத்தியுள்ளார்.
குழந்தையின் பெற்றோர் நாமக்கல் கலெக்டர் மற்றும் போலீஸில் புகாரளித்ததை தொடர்ந்து, மருத்துவர் அனுராதாவையும், லோகாம்பாளையும் கைது செய்தனர்.
இந்த நிலையில் மருத்துவர் அனுராதா பணியிடை நீக்கம் செய்யப்படுவதாகவும், அவர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.