வருகிற 29-ந்தேதி லக்னோவில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தையும் தவறவிடும் ஹர்திக் பாண்ட்யா!!

பெங்களூரு:
இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டயா, வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை தடுக்க முயற்சித்த போது இடறி விழுந்து இடது கணுக்காலில் காயமடைந்தார். பரிசோதனையில் தசைநாரில் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை. அவர் தற்போது பெங்களூருவில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொண்டுள்ளார்.
கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ கமிட்டி முன் இன்று அவருக்கு உடல்தகுதி சோதனை நடத்தப்படுகிறது. அதன் பிறகே அவர் எந்த போட்டிக்கு திரும்புவார் என்பது உறுதியாக தெரியவரும்.
என்றாலும் வருகிற 29-ந்தேதி லக்னோவில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்திலும் அவர் ஆடமாட்டார் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
நாக்-அவுட் சுற்றுக்கு முன்பாக அவர் முழு உடல்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்புகிறது. அதனால் அவருக்கு அதற்கு அடுத்த ஆட்டத்திலும் ஓய்வு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.